Sunday, December 19, 2010

403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4

இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************

திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் நாடு செழிக்க மழையை அருளுமாறு வருணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்!

மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்:



ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்



"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான வருண தேவனே! உன் மழையாகிய நீர்க்கொடையை சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு மேலேறி, வான் மேகங்களில் பரவி, திருமாலின் கருமேனி ஒத்த நிறம் பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய திருமாலின் வலக்கரத்தில் வீற்றிருக்கும் சுரதர்சன சக்கரம் போல் மின்னலாக பிரகாச ஒளி வீசி, பரமனது இடக்கரத்தில் உள்ள வலம்புரி சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக, சிறிதும் தாமதியாமல், மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், பூவுலகெங்கும் பெருமழை பொழிய வேண்டுகிறோம்."


பாசுர உள்ளுரை:

இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.

ஆழிமழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்

ஒன்று நீ கை கரவேல் - மூன்று மகாமந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்

ஆழியுட் புக்கு - வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து

முகந்து கொடு - அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து

ஆர்த்தேறி - கம்பீரமாக எழுந்து

ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்! (பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)

இங்கே "மேகம்" என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!

எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல, இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!


கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக (உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்!

ஆழிபோல் மின்னி - திவ்யஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற

ஆச்சார்யர்கள் (ஞானத்தால்ஒளி பெற்றதால்!) திருச்சக்கரமாகவும் உருவகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!

வலம்புரி போல் நின்றதிர்ந்து - ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்

தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் - ஞானத்தை மழை போல் பொழிந்து

நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில் நாங்கள் சரண் புகுந்தோம் ("மார்கழி நீராட" என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)

பாசுரச் சிறப்பு:

உறுப்புகளில் கண் எவ்வாறு முதன்மையானதோ, அது போல வருணன் மழைக்கு முதல் காரணகர்த்தா என்பதால், ஆண்டாளால் "கண்ணா" என்று விளிக்கப்படுகிறார்!

இன்னொறு ரசமான விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். மாதவன், கேசவன், தாமோதரன், பத்மனாபன், நாராயணன், கோவிந்தன் என்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப் பெற்றிருந்தாலும், கிருஷ்ணாவதார நிகழ்வுகள் பல இடங்களில் சுட்டப்படிருந்தாலும், இப்பாசுரத்தில் தான் கிருஷ்ணாவதாரப் பெயரான "கண்ணா" என்பதை ஆண்டாள் விளித்துப் பாடுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது! மழைத் தேவனான வருணனை அழைப்பதாகவே இருந்தாலும், வருணனைக் கூட நாச்சியார் கண்ணனாகவே கண்டாள் என்பதை ஒரு கவித்துவ நயமாக கொள்ளலாமில்லையா!

"மழைக்கண்ணா" என்று பாடாமல் "ஆழிமழைக்கண்ணா" என்கிறாள் ஆண்டாள்! அதாவது, வருணனின் பெருமையின் விஸ்தாரத்தை (மழைக்கு முதற்காரணமான கடல்களுக்கெல்லாம் வருணன் தலைவன் என்பதை!) ஒரு விளிப்பில் அழகாகச் சொல்கிறாள்!

"ஒன்று நீ கை கரவேல்" எனும்போது, வருணனுக்கு பரமன் வழங்கியுள்ள அற்புதமான (உலக உயிர்க்கெல்லாம் வாழ்வளிக்கும்) தொழிலின் மகத்துவம் நயமாக வெளிப்படுகிறது. தனது வள்ளல் தன்மையை ஒருபோதும் குறைத்துக் கொள்ளலாகாது என்பதை வருணனுக்கே நினைவூட்டுகிறாள் சின்னப்பெண் கோதை!

ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேகமானது தனது கொடையான மழையை பூமிக்கு வழங்கிய மாத்திரத்தில் வெளுத்து விடுகிறது. ஆனால், ஆச்சார்யர்களும், அப்பரமனும் ஞானத்தையும் அருளையும் குறைவின்றி அளித்துக் கொண்டே இருக்க வல்லவர்கள் ஆதலால், அவர்களின் கருமை நிறம் குன்றுவதில்லை!

அதோடு, மழை பெய்வது ஒரு மங்கலகரமான செயல் என்பதால் மங்கல இசையாக வலம்புரி நின்றதிர்வது போன்ற சத்தமும் வேண்டும் என்கிறாள்.

பத்மனாபன் கையில் ஆழி ஏன் மின்ன வேண்டும்? பரமனின் நாபியிலிருந்து எழுந்த தாமரை மலரில் பிரம்மன் அவதரித்ததால், பரமனுக்கு பத்மனாபன் என்ற திருநாமம். பரந்தாமனுக்கு மகனாக பிரம்மா பிறந்ததை எண்ணி அவனது சுதர்சன சக்கரம் மகிழ்ந்து மின்னியதாம்! திருப்பாவையில் ஒவ்வொரு பெயர்ப் பிரயோகத்திற்கும் காரணம் உண்டு, அது தான் ஆண்டாள்!

இறுதியாக, "வாழ உலகினில் பெய்திடாய்" என்று பாடுவதிலும் விஷயமிருக்கிறது. பெருவெள்ளம் வந்து அழிவேற்படாத வகையில் மழையை அருளுமாறு முத்தாய்ப்பாக வருணனுக்கு ஞாபகப்படுத்துகிறாள்.

தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது :)
"ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து" எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
"ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" எனும்போது வினை உவமையும்,
"சரமழை போல்" எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.

இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று பதினோரு முறை வருவதைக் காணலாம்.

இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் ! பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் "ழ" பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது :)


சங்கர் தனது பின்னூட்டத்தில் சொன்ன சுவையான விளக்கத்தையும், அதற்கான எனது மறுமொழியையும் பதிவிலேயே சேர்த்து விட்டேன் :)
**********************************
அன்புள்ள பாலா

இந்த நான்காவது பாசுரத்திற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான வியாக்கியானத்தை கேட்டிருக்கிறேன்.

"ஆழி மழைக் கண்ணா" என்று வருணனை ஏன் அங்கு கண்ணனின் நாமமிட்டு அழைத்தார் ? " ஒன்று நீ கை கரவேல் " அதாவது " ஒன்றை நீ மறைக்காதே " என்று சொல்கிறார். எதை மறைக்காதே என்று சொல்கிறார் ?

"ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்"

இந்தக் காரியமாகிய மழை பொழிவித்தலை செய்ய சூரியனுடைய துணை வேண்டுமல்லவா.. அந்த சூரியனையும் மறைக்கக் கூடிய வல்லமை பெற்றவன் நீ (மகாபாரதத்தில் ஜெயத்ரதன் வதம் போது சக்கரம் விட்டு சூரியனை மறைத்தது) அதனால் ஏதாவது பக்தனுக்கு அருள் பாலிப்பதற்காய் அப்படி சூரியனை மறைத்து மழை பெய்விக்காமல் செய்துவிடாதே..உலகம் வளம் பெறவும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து உன்னை துதிக்கவும் மழை மிகவும் அவசியம் என்று சொல்கிறாராம். அதனால் தான் மழை கொடு என்று சிம்பிளாக கேட்க்காமல் முழு water cycle -ஐயும் இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாராம் :)

இது சரியான விளக்கமா...over to Bala,KRS & Kumaran :)

**********************************
சங்கர்,

சூரியனை மறைத்து விடாமல் இருக்குமாறு ஆண்டாள் பரமனாகிய கண்ணனிடம் வேண்டுவதாக தாங்கள் கூறிய விளக்கத்தின் தொடர்ச்சியாக நான் (வீட்டுக்குள்ளேயே!) ரூம் போட்டு யோசித்ததில் தோன்றியதை எழுத உத்தேசம் :)

"ஆழிமழைக் கண்ணா, ஒன்று நீ கை கரவேல்" என்று கோதை நாச்சியார் பாடும்போது பரந்தாமனைத் தான் விளித்து வேண்டுகிறார் என்று எண்ண பாசுரத்தில் சாத்தியம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. மழைக்குக் கடவுளாக வருணன் இருப்பினும், கடல் நீரை ஆவியாக்குவதால், சூரியனே முதல் காரணகர்த்தா ஆகிறான்! ஆனால், கடல் நீருக்குச் சொந்தக்காரன் வருணன் என்பதால், மழை பொழிய சூரியன், வருணன் ஆகிய இருவருமே பிணக்கின்றிச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது இல்லையா ?

அதனாலேயே (மேலோட்டமாகப் பார்த்தால், வருணனை "கண்ணா" என்றழைப்பது போல் தோன்றினாலும்!) சூரியன், வருணன் என்ற இருவருக்கும் (மற்றும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும்) தலைவனான பரமாத்விடம், மார்கழி நீராட மழை வேண்டி விண்ணப்பிப்பதே உகந்தது என்று ஆண்டாள் பாடுவதாக சொல்வதும் பொருத்தமானதே !!!!

மேலும், சூடிக் கொடுத்த நாச்சியார் வெறுமனே "சூரியனை மறைத்து விடாதே!" என்று கூறாமல், மழைச் சுற்றையே (இதை 'வாட்டர் சைக்கிள்' என்று அழைக்க வேண்டாமே:)) அறிவியல் ரீதியாக விவரித்து, மழை பொழிவதற்கு சூரியனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார்!

அதே சமயம், எல்லாமறிந்த பரமனுக்கே தான் "மழை விளக்கம்" அளிப்பதற்காக கண்ணனுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில், மின்னலைச் சக்கரத்தின் பேரொளிக்கும், இடியை சங்கத்தின் முழக்கத்திற்கும், மழையை சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக பாசுரத்தில் பாடி கண்ணபிரானை மனம் குளிர வைத்து விடுகிறார் ! இதன் பின்னரும், அடியவர் மார்கழி நீராடி மகிழ, மழைக்கொடையை வழங்காமல் கண்ணனால் இருக்க முடியுமா என்ன ? :)

ஆண்டாள் நாச்சியார், "ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" என்று பாடுவது மின்னலைத் தொடர்ந்தே இடி முழக்கம் ஏற்படுகிறது என்பதால்! ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கோதை நாச்சியாருக்குத் தெரியாத விஷயமா என்ன ?

என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************


என்றென்றும் அன்புடன்
பாலா

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி - TPV3

இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
வாசிக்க:
மார்கழித்திங்கள் மதி நிறைந்த
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்

திருப்பாவையின் மூன்றாம் பாடல் உத்தமனைப் பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வங்களைப் பற்றிப் பேசுகிறது!



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!



"வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூன்றடி மண்ணை இரந்து பெற்று, விஸ்வரூபமெடுத்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றிப் பாடி, பாவை நோன்புக்கு வேண்டி அதிகாலை நாங்கள் நீராடினால், பிணி, பஞ்சம் போன்ற தீங்கினால் நலிவுறாமல், நாடு முழுவதும் மும்மாரி மழை பெய்திடும். அதனால் செழித்து வளர்ந்த சிவந்த நெற்பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளி விளையாடும். அங்குள்ள நீலவண்ணக் குவளை மலர்களில் புள்ளி வண்டுகள் உறங்கும். வள்ளல் குணம் கொண்ட பசுக்கள் பாலை சிறிதளவும் தேக்கிக் கொள்ளாமல், கறப்பவரின் கை தங்கள் பெருத்த மடியில் பட்ட மாத்திரத்திலேயே பாலைக் குடம் நிறைய சுரக்கும். இங்கனம், அழியாத செல்வம் எங்கும் நிறைந்து காணப்பெறும்."

பாசுர விசேஷம்:

முதல் பாசுரத்தில் வைகுந்தநாதனான நாராயணனையும், 2வது பாசுரத்தில் பாற்கடலில் பையத்துயின்ற பரமனான வியூக மூர்த்தியையும் போற்றிப் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன விபவதார மூர்த்தியைப் பாடுகிறாள்!

திரிவிக்ரமனே புருஷோத்தமன் (புருஷ உத்தமன்), அதாவது, பரமன் வாமனனாகி மூவுலகை அளந்த காலத்தில், அவனது திருவடியானது, அடியவர்-கொடியவர் என்று பாராமல் அனைத்து உயிர்களையும் தொட்டு கடாட்சித்தது.

வாமனன் எப்படி புருஷ உத்தமன் ஆகிறான்?
தானும் அழிந்து பிறரையும் சேர்த்துக் கெடுப்பவன் அதமாதமன்.
பிறரை அழித்துத் தான் வாழ்பவன் அதமன்.
பிறரும் வாழத் தானும் வாழ்பவன் மத்யமன்.
தான் அழிந்தாலும்/அவமானப்பட்டாலும் பிறரை வாழ்விப்பவன் உத்தமன். தனக்கென்று வாழாமல் பிறர்க்கேயாக இருப்பவன் உத்தமன்.

"பேர் பாடி" என்பதிலும் சிறப்பு உள்ளது. பரமனின் திருநாமமானது நாமியைக் (பரமனை) காட்டிலும் உயர்ந்ததாக நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்! அதாவது, பரமன் உருக்காத பொன் போன்றவன், அவன் திருநாமமோ பொன்னால் செய்யப்பட்ட அழகான ஆபரணம் போன்றது என்று பெரியோர் கூறுவர்!

"தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து" எனும்போது நிலம் செழித்து, மாந்தர் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பது அழகாக சொல்லப்பட்டுள்ளது:

1. தடங்கலின்றி பெய்ய வேண்டும்
2. நாடு முழுதும் பெய்ய வேண்டும்
3. ஒரு மாதத்தில் 9 நாட்கள் வெயில், 1 நாள் மழையென மாதம் மூன்று நாட்கள் பெய்ய வேண்டும் (ராம ராஜ்யத்தில் இப்படித் தான் மழை பெய்ததாம்!)

"மும்மாரி" என்பது வாமன அவதாரத்துடன் சம்பந்தமுடைய மூன்று தீர்த்தங்களைக் குறிப்பதாக ஒரு உள்ளர்த்தமும் உண்டு. அதாவது, மகாபலி தானத்திற்கு முன் பரமனின் கையில் இட்ட நீர், ஓங்கியுலகளந்த த்ரிவிக்ரமனின் திருவடிகளை அலம்பிய பிரம்மனின் கமண்டல நீர் மற்றும் பரமனின் திருவடி வீச்சில் அண்டக்கூடு (cosmic shell) உடைந்து உருவான ஆகாச கங்கை நீர்! அப்படி விஸ்வரூபமெடுத்த பரந்தாமனை ஜாம்பவான் அவசர அவசரமாக பிரதட்சிணம் செய்தாராம்!

கங்கை நீர் மண்ணுலகு வரக் காரணமாக இருந்த உலகளந்த வாமனனை உலகு செழிக்க மழை தர வேண்டுவது பொருத்தமான ஒன்று தான்! அது போல வேதத்தில் அதிக இடங்களில் குறிப்பிடப்படுவதும் த்ரிவிக்ரம அவதாரமேயாம். முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வாரின் முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள் த்ரிவிக்ரமன் எழுந்தருளியுள்ள திருக்கோவலூரில் தான் அருளிச்செயல்களாக அரங்கேறின.

கோதை நாச்சியார் ஏன் பூர்ண அவதாரங்களான ராம-கிருஷ்ண அவதாரங்களைப் பாடாமல், த்ரிவிக்ரமன் பேர் பாடச் சொல்கிறாள்? இதே த்ரிவிக்ரம அவதாரத்தை 17வது பாசுரத்திலும்(அம்பர மூடறுந்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே) என்றும், 24வது பாசுரத்தின் முதலடியிலும்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!) என்றும் ஆண்டாள் போற்றுகிறாள்! காரணம் இருக்கிறது! ஸ்ரீராம-கிருஷ்ண அவதாரங்களில் முறையே ராவணன், கம்சன் தவிரவும் பல அசுரர்களை பரமன் வதம் செய்கிறார். கண்ணன் மேல் மையல் கொண்டிருந்தாலும், அன்பே உருவான பூமிதேவியான (பிரேம சொரூப ஜகன்மாதா!) ஆண்டாளுக்கு (மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது!


ராம அவதாரத்திலேயே தண்டகாரண்யத்தில் ரிஷிகளின் யாகத்துக்கு தடங்கல்கள் செய்த அசுரரை ராமர் வதம் செய்தபோது, பிராட்டி அதை விரும்பாமல், ராமருடன் வாதம் செய்திருக்கிறாள்!

பரந்தாமன் வாமன அவதாரமெடுத்து, மன்னன் மகாபலியிடம் மூன்றடி மண் தானம் பெறச் சென்றபோது, தன் மார்பில் குடியிருந்த திருமகளின் கடாட்சம் மகாபலிக்கு கிட்டிவிட்டால், தான் சென்ற காரியம் நிறைவேறாது என்றுணர்ந்து, தன் மார்பை உத்தரீயத்தால் (மேற்துணி) மறைத்துக் கொண்டு சென்றதாக கதாகாலட்சேபத்தில் கேட்டதுண்டு! திருமகளை வைகுந்தத்தில் விட்டுவிட்டுச் சென்றிக்கலாம் தான்! அவ்வாறு சென்றிருந்தாலும், திருமகள் உடன் இல்லாத பரமனுக்கு தானம் கிடைத்திருக்காது! அந்தப் பரந்தாமனுக்கே என்ன ஒரு காட்ச்-22 நிலைமை, பாருங்கள் :-) அதனாலேயே, பரமன் பிரச்சினையை உத்தரீயத்தை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது!

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப - இவ்வரிக்கு கவித்துவமான விளக்கமுண்டு. தாமரை மலர்த்தேனை முட்டக்குடித்த ஆண்வண்டானது, உண்ட மயக்கத்தில் மலரின் நடுவிலேயே உறங்கி விட, மாலையானவுடன் தாமரை இதழ்கள் மூடிக்கொண்டு விட, வண்டு மாட்டிக் கொண்டு மலருக்குள்ளேயே இரவைக் கழிக்க வேண்டியதாகிறது! சூரிய உதயத்தில் தாமரை மீண்டும் மலர, ஆண்வண்டு பெண்வண்டிடம் ஒட, இரவு முழுதும் காத்திருந்த பெண்வண்டு, ஆண்வண்டின் நடத்தையை சந்தேகிக்க, ஊடல் பின் கூடல்!


ஆண்டாள் என்ற கவிதாயினி இயற்கையை ஆராதிக்கும் அழகு,

ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்


இப்பாசுரத்தில் வெளிப்படுவதைக் காணலாம்! இயற்கையோடு இயைந்து வாழ்தலே மாந்தர்க்கு நன்மை பயக்கும், இயற்கைச் செல்வம் பேணப்பட வேண்டிய அவசியம் ஆகிய அறிவியல் செய்திகளை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு சிறு பெண் அருமையாகக் கூறிச் சென்று விட்டாள்.

பாசுர உள்ளுரை:


1. ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில், "உத்தமன் பேர் பாடி" என்று கூறுவது, பெருமாளின் புகழைப் பாடுவதை விட, அவனது திருநாமத்தைப் (அஷ்டாட்சர மந்திரம்) பாடுதல் தான் சிறந்தது என்ற உள்ளர்த்தத்தை உடையது!

2. முதல் பாசுரத்தில், அஷ்டாட்சர மந்திரத்தையும், இரண்டாவது பாசுரத்தில் த்வய மந்திரத்தையும் கொண்டாடிய ஆண்டாள், இம்மூன்றாம் பாசுரத்தில், கீதாசார்யனின் சரம சுலோகத்தின் (மாமேகம் சரணம் வ்ரஜ - மோக்ஷயிஷ்யாமி மாசுச ஹ) செய்தியை முன்னிறுத்துகிறார்.

இந்த மூன்றையும் கைக் கொண்டாலே, பரமனை அனுபவிக்கவும்,மோட்ச சித்தியைப் பெறவும் அடியவர் பாத்திரமாகிறார்.

அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் ஆகிய மூன்றும் முறையே தாரகம், போக்யம், போஷகம் என்பதாகச் சொல்லலாம். சரீர நோக்கில் பார்க்கையில்,
தாரகம் - உணவு
போக்யம் - பால், நெய்
போஷகம் - வெற்றிலை, சந்தனம் (தாம்பூலம்)

ஆக, அஷ்டாட்சரம், த்வயம், சரம் சுலோகம் என்ற மூன்று மட்டுமே அடியாரின் ஆத்மசுத்திக்கு போதுமானவை; பரமனின் கல்யாண குணங்களை அனுபவிப்பதற்கு, மோட்ச சித்திக்கும் ஆதாரமானவை. ஆக,கர்ம ஞான யோகங்களைக் காட்டிலும், பக்தி யோகமே சிறந்ததாக நாச்சியார் குறிப்பிலுணர்த்துகிறார்.

இன்னும் சற்று எளிமையாக சொல்ல வேண்டுமானால், முதல் பாசுரத்தில், கோபியர்களை விரதத்திற்கு அழைப்பதாகவும், இரண்டாவதில், விரதத்தின் போது செய்யத்தக்க / தகாதவற்றை எடுத்துரைப்பதாகவும், இந்த மூன்றாவது பாசுரத்தில், விரதத்தின் நற்பலன்களை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

3. பாபங்கள் அணுக முடியாதவன் பரமன் என்பதால், "உத்தமன்" என்று பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளார்!

4. 'சாற்றி நீராடினால்' என்பது சரணாகதி உபதேசத்தை உட்பொருளாகக் குறிக்கிறது.

5. 'மும்மாரி' என்பது மூன்று வகைப்பட்ட பகவத் காரியங்கள் வாயிலாக, நோன்பின் சரணாகதிப் பலனை பெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது,
அ) ஆச்சார்ய உபதேசம்
ஆ) திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைப் பாடுதல்
இ) திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனை வழிபடுதல்

6. "ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள" --- செந்நெல் வயல்களில் துள்ளி விளையாடும் மீன்கள், தங்கள் உபதேசங்கள் பலனளிப்பதைக் கண்டு மகிழ்வுறும் ஆச்சாரியர்களை உட்பொருளாகக் குறிக்கிறது.

7. "பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப" என்பதில் சுட்டப்படும் வண்டு, அடியவர் நெஞ்சத்தில் (யோக நித்திரையில்) உறைந்திருக்கும் வைகுந்தப் பெருமானைக் குறிக்கிறது.

8. "தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க" என்பது ஆச்சார்யனின் வாத்சல்யத்தால் ஈர்க்கப்பட்ட சீடர்களை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

9. "வள்ளல் பெரும்பசுக்கள்" தயாள குணம் உடைய, பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஆச்சார்யர்களைக் குறிக்கிறது.


10. "நீங்காத செல்வம்" என்பது (திருமகளின் பரிந்துரையின் பேரில், அடியவர்க்கு பெருமாள் அருளும்!) பூவுலகில் வாழும் காலத்தில், குன்றாத ஞானத்தையும், அதன் பலனால் கிட்டிய மோட்ச சித்தியையும் குறிக்கிறது. ஏனெனில், மற்ற எல்லா செல்வங்களும் நீங்கக் கூடிய செல்வங்கள் ஆதலால் !


என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, December 17, 2010

வையத்து வாழ்வீர்காள், நாமும் நம் பாவைக்கு - TPV2

இது ஒரு மீள்பதிவு, சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் எழுதிய இடுகை.
***************************************************************

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று வைகுண்ட ஏகாதசி (17/12/2010) நாளன்று, பிருந்தாவனஷேத்ர நாயகனான பார்த்தசாரதியின் திவ்ய தரிசனம் அவனருளால் கிடைக்கப் பெற்றது மன நிறைவை அளித்தது.

திருப்பாவையின் இரண்டாவது பாசுரமானது, நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள் பற்றிப் பேசுகிறது।
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்!


பூவுலக மாந்தர்களே, பாவை நோன்பு மேற்கொள்பவர்களுக்கான வழிமுறைகளைக் கேட்பீராக !

பாற்கடலில் (பாம்பணையில்) யோக நித்திரை கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடியை வணங்கிப் போற்றுவோம். நோன்பு காலத்தில் நெய்யும், பாலும் உண்ண மாட்டோம். அதிகாலையிலேயே நீராடி, கண்களுக்கு மை இடாமல், கூந்தலில் மலர் சூடாமல், ஆகாத செயல்களைச் செய்யாமல், பொய்யுரைக்காமல், கோள் சொல்லாமல், பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் நம்மால் இயன்ற அளவு தானம் வழங்கி, நாம் உய்வதற்கான வழியை நாடி, மகிழ்ந்து, இவ்வாறு பாவை நோன்பிருப்போம்!


பாசுரச் சிறப்பு:

திருப்பாவையின் முதல் 5 பாசுரங்கள், முறையே, பரமபதம் (நாராயணன் என்ற வியூகம்), திருப்பாற்கடல் (பையத்துயின்ற பரமன்), அவதாரம் (ஓங்கி உலகளந்த உத்தமன்!), அந்தர்யாமி (ஆழிமழைக்கண்ணா, பத்மனாபன்), கோயில் வழிபாட்டுக்கான அர்ச்சை (மாயன், தாமோதரன்) என்ற 5 இறை நிலைகளைப் பற்றிப் பேசுகின்றன.

ஆண்டாள், பூவுலக அடியார்களை "வையத்து வாழ்வீர்காள்!" என்று விளித்து, எது மோட்ச சித்தியாகிய பேரின்பத்தை நல்க வல்லது என்பதை மிக நேரடியாக, எளிமையாக சொல்லி விடுகிறாள்! அதாவது, "பையத்துயின்ற பரமனடி" பாடுவது (சரணாகதி) மட்டுமே உபாயம். இவ்வுலகத்தில் பிறந்து வாழ்வதற்கான
முக்கிய நோக்கமே அது தான்! மற்றவை எல்லாம் secondary...

"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்" என்பதிலும் ஒரு சுவையான சங்கதியை ஆண்டாள் தெரிவிக்கிறாள்! தென்னாட்டினர், நோன்பின்போது அரிசியை கைவிடுகிறார்கள், வடநாட்டினர் கோதுமையை தவிர்க்கிறார்கள் இல்லையா? அது போல, ஆய்ச்சிமார்கள் (பசுவிலிருந்து கிடைக்கும்) தாங்கள் மிக விரும்பி
உண்ணும் நெய்யையும், பாலையும் பாவை நோன்பின்போது கை விடுவதை இதில் உணர்த்துவதாக கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே! ஆய்க்குல பெண்டிர், கண்ணனுக்கு வேண்டி, மையிடுவதையும், மலர் சூடுவதையும் கூட தள்ளி வைக்கிறார்கள்.

இறுதியாக, "நாராயணனே நமக்கு பறை தருவான்" என்பதில் மிகப் பெரிய அர்த்தமிருக்கிறது! நோன்பிருந்து சிலபல சிற்றின்ப விஷயங்களை துறந்தாலும், ஒரு கர்ம யோகியைப் போல, கண்ணன் மனது வைத்தால் மட்டுமே (பிராப்தம்!) சித்தி கை கூடும் என்பதைப் புரிந்தவராக கோபியர் இருப்பதை உணர முடிகிறது!
பாசுர உள்ளுரை:

1. வைணவ அடியார்க்கு, பரமன் மேல் உள்ள பக்தியை விடவும், ஞானத்தை விடவும், உள்ளத் தூய்மையும், ஈகையும், எளிமையும் முக்கியமானவை என்பதை இப்பாசுரம் குறிப்பில் உணர்த்துகிறது.

2. முதல் பாசுரத்தில் (மார்கழித் திங்கள் மதி நிறைந்த), பரமன் அடியவர்க்கு என்னென்ன செய்வான் என்பதை குறிப்பிட்ட ஆண்டாள் நாச்சியார், இப்பாசுரத்தில், அடியவர் செய்யத் தக்க / கூடாத செயல்களைப் பற்றிக் கூறுகிறார்!

3. மூன்று வகையான நோன்புக் கிரிசைகள் பற்றி இப்பாசுரம் பேசுகிறது.
அ) வாக்கு - "பரமனடி பாடி" என்பது வாசிகம்
ஆ) செயல் - நீராடுதல், ஈகை செய்தல் ஆகியவை காயிகம்
இ) மனம் - "உய்யுமாறெண்ணி" அதாவது பரமனை சதாசர்வ காலமும் சிந்தையில் வைத்தல் என்பது மானசீகக் காரியம்

4. "ஐயம்' என்பது ஆச்சார்ய சமர்ப்பணத்தையும், "பிச்சை" என்பது சன்னியாசிகளுக்கு உரிய சமர்ப்பணத்தையும் குறிக்கிறது.

5. நோன்பின் போது விலக்க வேண்டிய ஆறு: நெய் உண்ணல், பால் உண்ணல், மையிடுதல், மலர் சூடல், செய்யாதனச் செய்தல், கோள் சொல்லல் ஆகியவை.

கடைபிடிக்க வேண்டிய ஆறு: பரமனடி பாடுதல், அதிகாலை நீராடல், ஐயம் இடல், பிச்சை இடல், அவற்றை இயன்றவரை இடல், உய்வதற்கு வேண்டி உகந்து இடல் ஆகியவை

6. மையிட்டெழுதல் என்பது ஞான யோகத்தையும், மலரிட்டு முடித்தல் என்பது பக்தி யோகத்தையும், ஐயம் என்பது பகவத் வைபவத்தையும், பிச்சை என்பது பாகவத வைபவத்தையும் உட்பொருளாகக் கொண்டுள்ளன.

7. 'உய்யுமாறெண்ணி' என்ற பதத்தை 'உய்யும்', 'ஆறு எண்ணி' என்று பிரிக்கலாம். 'உய்யும்' என்பது மோட்ச சித்தி பெறுவதைக் குறிக்கிறது. அதை அடைய, வரதராஜப் பெருமான், திருக்கச்சி நம்பிகள் வாயிலாக, ராமானுஜருக்கு உபதேசித்த ஆறு (விசிஷ்டாத்வைத) வைணவக் கோட்பாடுகளை சிந்தையில் நிறுத்துவதை, "ஆறு எண்ணி" என்பது உட்பொருளாகக் குறிக்கிறது.

அந்த ஆறு கோட்பாடுகள்:

1. ஸ்ரீமன் நாராயணனே ஆதிமூலம், அனைத்துக்கும் காரண கர்த்தா
2. எல்லா உயிர்களிலும் ஜடப் பொருள்களிலும் ஸ்தூல / சூட்சும சரீரமாக பரமனே விரவி நிற்கிறான்
3. பரமனின் திருவடிகளில் சரணாகதி அடைவதே மோட்ச சித்திக்கான ஒரே உபாயம்
4. அந்திம காலத்தில், பரமனை சிந்தையில் நிறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை
5. உடலில் வாழ்ந்த காலத்தில் (பரமன் திருவடிகளில்) பூரண சரணாகதியை கடைபிடித்த ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பின்னர் முக்தி அடைகிறது.
6. கற்றறிந்த வைணவ ஆச்சார்யனின் உபதேசமே சுயத்தை உணரும் (self enlightenment) நிலையை அடைவதற்கான உபாயம்

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, December 16, 2010

400. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் - TPV1

இது ஒரு மீள்பதிவு, சென்ற ஆண்டு மார்கழி மாதத்தில் எழுதிய இடுகை.
******************************************************************
திருப்பாவையுடன் எனது நானூறாவது பதிவு !

சென்ற வருடம் மார்கழி மாதத்தின் போது ஒரு சில திருப்பாவை பாசுரங்களுக்கு பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எனது திருப்பாவைப் பதிவுகளில் எழுதியிருந்தேன்.

விட்டுப்போன பாசுரங்களுக்கு, பொருள் விளக்கத்தையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லும் பதிவுகளை இந்த மார்கழி மாதம் இட உத்தேசம். திருப்பாவையின் முதல் பாடலிலிருந்து ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் மார்கழி பற்றியும், பாவை நோன்பு குறித்தும் ஒரு சிறிய முன்னுரை !
மார்கழி, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் ஒரு மாதம். 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு' ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு நலத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப் பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித் துதித்து வழிபட்டனர்.
தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்ற சமயம் சூடிக் கொடுத்த நாச்சியார் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை'.
'திருப்பாவை' யும் (திருமால் மீது பாடப்பட்ட பாடல்கள்), மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப் பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களும் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழி மாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்திப் பெருக்கும், தன்னலமற்ற இறைசேவை ஆகியவை தவிர வேறு நோக்கம் எதுவும் இல்லாமலிருப்பதையும் காணலாம்.
நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்


மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்.

"அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்!

கூர்மையான வேலைக் கொண்டு பகைவர்க்கு கொடுமை செய்பவனாகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகிய விரிந்த விழிகளை உடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய வண்ண மேனியனும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!"



பாசுர விசேஷம்:

1. அடியவர், தனக்கும் எம்பெருமானுக்கும் ஆன உறவை உணரும் நாள் "நன்னாள்" என்று போற்றப்படுகிறது! "நீராடப் போதுவீர்" என்பது அடியவரை கைங்கர்யம் செய்ய அழைப்பதை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது.

2. மதி நிறைந்த - அந்த வேண்டுகோளை கேட்ட மாத்திரத்தில், கோபியரின் முகங்களும் பவுர்ணமி நிலவை ஒத்த பிரகாசம் அடைவதாகவும் வைத்துக் கொள்ளலாம் ! வெண்ணிலவு, வானத்தில் மட்டுமே இல்லை :)

3. 'செல்வ சிறுமீர்காள்' என்பதில் உள்ள 'செல்வம்' என்ற பதம் கண்ணன் மேல் உள்ள பேரன்பையும், அவனது துணை தரும் மகிழ்ச்சியையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

4. இப்பாசுரத்தில், 'ஆய்ப்பாடி' என்பது சம்சார சாகரத்தை உள்ளர்த்தமாக குறிக்கிறது.

5. "நேரிழையீர்" என்ற பதம் அமைதியையும், புலனடக்கத்தையும் ஒரு சேர வாய்க்கப் பெற்ற மாந்தரைக் குறிக்கிறது.

6. கூர்வேல் கொடுந்தொழிலன் -- தன்னுடைய சங்கல்பத்தால், நமது பாவங்களுக்கு நிவர்த்தி தர வல்லவன் கிருஷ்ணன் என்பதை உள்ளர்த்தமாக உணர்த்துகிறது.

7. கதிர் மதியம் போல் முகத்தான் -- பரந்தாமன் ஒரே சமயத்தில், அடியார்களுக்கு அருளையும் (குளிர்ச்சி), பகைவர்க்குத் துன்பமும் (வெப்பம்) தர வல்லவன் என்பதால் !

8. பறை தருவான் -- "மோட்ச சித்தியை அடைவதற்கான உபாயங்களை அருள்வான்" என்பது உட்பொருள்.

9. "நாராயணனே" என்பது உபய ஸ்வரூபத்தையும், "நமக்கே" என்பது அதிகாரி ஸ்வரூபத்தையும் குறிப்பில் உணர்த்துகிறது. இந்த இரண்டு சொற்களிலும் காணப்படும் ஏகாரம், பரமனை விட்டால் நமக்கு வேறு கதியில்லை என்பதை அறுதியிட்டு உணர்த்துகிறது இல்லையா ?

10. மேலும், கர்ம/ஞான யோகங்களை விடவும், பக்தி யோகமே பரமனின் அருளைப் பெறவும், அவனை அடையவும் சிறந்த மார்க்கமாக, திருப்பாவையின் முதல் பாசுரம் அறிவிக்கிறது.


என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, August 23, 2010

565. ஒரு சந்தோஷமும், ஒரு துக்கமும்!

கௌசல்யா: நேற்று கௌசல்யாவையும் பானுபிரியாவையும் வீட்டிற்கு அழைத்திருந்தேன். எப்போதும் போல, கௌசல்யாவை நேரில் சந்திக்கும்போதெல்லாம் பெய்யும் மழை, நேற்றும் விடவில்லை!

பானுபிரியா திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் பொறியியல் (நுண்ணணுவியல்) முதலாண்டு முடித்து விட்டார். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நானிட்ட வேண்டுகோள் இடுகையை வாசித்து பெரிய அளவில் ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

கௌசல்யா தற்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ஹவுஸ் சர்ஜன்சி பயின்று வருகிறார். இன்னும் சில மாதங்களில் முழு வைத்தியர் ஆகி விடுவார்! இந்த 5 ஆண்டு கல்லூரி/விடுதி வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், கலகலப்பும், தைரியமும் கூடி இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவத்தில் மேல்நிலைக் கல்வி பயிலப் போவதாகக் கூறினார். முடிந்த உதவி செய்வதாக கூறியிருக்கிறேன்.

மற்றொரு முக்கியமான விஷயம். கௌசல்யாவுக்கு இப்போது மாதம் 7000 ரூ அரசு உதவித் தொகை (stipend) கிட்டுவதால், தன் செலவை தானே பார்த்துக் கொள்ள முடிவதாகக் கூறினார். அதோடு, தனது முதல் மாத உதவித் தொகையிலிருந்து, என்னை மிகவும் வற்புறுத்தி, எங்களது கல்வி உதவிச் சேவைக்கு தனது பங்காக ரூ 2500-ஐ வழங்கிய செயல் மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது! கௌசல்யா டாக்டர் ஆனதை விட, இப்படி நல்ல மனுஷியாக பரிமளிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது! அவரது கல்விக்கு உதவிய / அவளை வாழ்த்திய நல்ல நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.
*******************************

அந்தோணி முத்து: இன்று காலை, என்னை சகோதரனாக பாவித்த, எனது இனிய நண்பர் அந்தோணி முத்துவின் திடீர் மறைவு என்னை உலுக்கி விட்டது! அவர் கடந்த ஒரு வாரமாக ஆஸ்துமா பிரச்சினையால் மருத்துவமனையில் இருந்தாலும், முன்பு ஒரு முறை சுகமடைந்து வீடு திரும்பியது போல, இப்போதும் உடல் நலம் தேறி வீடு திரும்பி விடுவார் என்று தான் எண்ணியிருந்தேன்.

இம்முறை வீடு திரும்பவில்லை :-( நாமொன்று நினைக்க, தெய்வமொன்று நினைக்கிறது! தான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அடுத்தவர் உணராத வண்ணம் இயல்பாக நடந்து கொள்பவர் அந்தோணி! அதனால், அவருடன் சகஜமாக உரையாட முடிந்தது.

25 ஆண்டுகளுக்கு மேல் சக்கர நாற்காலியிலும், படுக்கையிலும் தன் வாழ்க்கையை செலவழித்தவரிடம், சில சமயங்களில், என் (காலணா பெறாத!) உடல் நலப் பிரச்சினைகளைக் கூட இயல்பாக பேச முடிந்ததை இப்போது எண்ணிப் பார்க்கையில் மனது கனக்கிறது!

ஒரு இரண்டரை ஆண்டுகளாகத் தான் எனக்கு அந்தோணியைத் தெரியும். இந்த குறுகிய காலத்தில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, மனஉறுதி, யாரிடமும் உதவி கோரத் தயங்கும் இயல்பு, வெப் டிசைன் விஷயங்களை கற்பதில் காட்டிய உற்சாக ஆர்வம், நன்றி பாராட்டும் குணம் போன்றவற்றால் என்னை ஆச்சரியப்படுத்திய, ஏன் எடுத்துக்காட்டாகக் கூட இருந்த ஓர் அசாதாரணமான நண்பராக இருந்தார்! அந்தோணி முத்துவின் நட்பு எனக்கு பல நேர்மறை விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது!

அந்தோணியின் ஆன்மா சாந்தியடைய அந்த வைகுண்ட நாதனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

Sunday, April 18, 2010

564. IPL Semifinal Scenario -Part 2

தமிழ் வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு பொறுத்தருளவும் :-) IPL கிரிக்கெட் பற்றி எழுதும்போது, தமிழில் எழுதினாலும், ஆங்கிலம் நிறைய கலப்பதால், பெரிய வித்தியாசம் ஏதுமில்லை!

3 matches to go: CSK vs KXIP, DC vs DD, KKR vs MI

8 possible scenarios are possible and after analyzing those, the summary is as follows:

1. I will talk about CSK first! Chennai needs a "simple" win (last ball of 20th over OR by 1 ball) against KXIP to qualify for Semis irrespective of what happens in other 2 matches as CSK has a NRR that is better than all its possible competitors, RCB, DD, DC & KKR.

CSK will decide its own destiny today at Dharmasala!

2. Mumbai win will ensure 100% Semifinal berth for RCB irrespective of other 2 matches.

CSK Losing against KXIP ensures a 3rd place Semifinal spot for RCB, irrespective of other 2 matches. So, RCB & Mallya fans should support Punjab team :-)

Considering all scenarios, it is 99% likely that RCB will enter semifinals in 3rd or 4th place. So, all RCB fans can actually relax for few days, before it gets beaten in the semis anyway ;-)

3. CSK & DC losing their respective matches and KKR winning against MI (ensuring its NRR overtakes that of DC!) is the only realistic scenario where KKR goes to semis along with MI, DD & RCB.

There are other unrealistic scenarios too where KKR can go thru' (theoretically speaking!) where "Himalayan" margin of win is needed by KKR, moving from a -ve NRR (-0.46) to +ve NRR ahead of teams like RCB & DD. I am not going to waste my time discussing those (as though I am not doing now watching IPL!) ;-)

4. One of the 2 teams, DD or DC, gets thru' to Semifinals w/o any worry about NRR & results of other 2 matches, as it reaches 16 points.

MI winning & CSK losing their respective matches is good not only for RCB, but for DC and DD as well (irrespective of the DD-DC result!) to qualify for semis. So, number of enemies for CSK has increased dramatically now ;-)

5. If DC & CSK win today, it will be ensured that 3 teams from the south (Chennai, Hyderabad, Bangalore) enter semifinals and at least 1 would reach the IPL finals!

An MI win & CSK loss ensures 2 South teams (RCB and DC) reach SF and here again, 1 of them would reach Finals!

But my support would be for Mumbai if CSK does not reach Finals! (I am sure that CSK will enter Semis anyway :-)) I would like to see Mumbai win the finals, just to see the smile on the face of that great man who has led his team so admirably, though I am not a great fan of Nita Ambani ;-)

Making the "God" feel sad is not good for the country that has embraced cricket as its religion!

அன்புடன்
பாலா

Saturday, April 17, 2010

563. IPL செமிஃபைனல் தகுதி நிலைமை

இன்று நடக்கவிருக்கும் மும்பை-பெங்களூர் மற்றும் KKR-RR ஆட்டங்கள் செமிஃபைனல் தகுதிக்கான போட்டியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல.

1. பெங்களூர் வென்றால், NRR குறித்த அக்கறையின்றி, தகுதி பெறலாம். அவ்வளவே! மும்பையிடம் தோற்றாலும் கூட, மகா கேவலமாய் தோற்றாலொழிய, பெங்களூர் செமிக்கு தகுதி பெறுவது 99% உறுதி. எத்தனையாவது இடத்தில் தகுதி பெறும் என்பதை மட்டுமே, இந்த RCB-MI ஆட்டம் நிர்ணயிக்கும். அதாவது, மும்பை, பெங்களூர் செமிஃபைனலுக்குத் தகுதி பெற்று விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம்!

2. ராஜஸ்தானின் NRR மோசமாக இருப்பதால், KKR-ஐ அதிக ரன் வித்தியாசத்திலோ, மிகக் குறைந்த ஓவர்களிலோ வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் உள்ளது. இது சாத்தியம் இல்லை என்பது என் அனுமானம். ஆனால், சென்னை பஞ்சாபுடன் தோற்று, தில்லி DC-ஐ வீழ்த்தினால், (மும்பை, RCB, தில்லியோடு) 4வது இடத்தில், செமிக்கு தகுதி பெறலாம். அதனால், ஒரு 20% வாய்ப்பு இருப்பதாகக் கொள்ளலாம்!

3. (NRR படுமோசமான நிலையில் இருக்கும்!) கொல்கத்தாவோ இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை (பெரிய அளவு வித்தியாசத்தில்!) வென்றாலும், மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் (பெரிய அளவு வித்தியாசத்தில்!) வெல்ல வேண்டும்! ஆக, KKR-க்கு 5% வாய்ப்பு கூட கிடையாது. மேலும், பெரிய அளவு வித்தியாசத்தில் வெல்வது என்பது T-20 ஆட்டத்தில் அவ்வளவு எளிதானதல்ல. எப்போதாவது (சென்னை KKRஐ சேப்பாக்கத்தில் வீழ்த்தியது போல!) நிகழ்வது அது!

4. சென்னை செமிக்கு தகுதி பெற நாளை பஞ்சாபை வென்றாக வேண்டும்! NRR ஆரோக்கியமாகவே இருப்பதால், பெரிய அளவில் வெல்ல வேண்டும் என்று நினைத்து ஆடி நாம் தோற்காமல் இருந்தால் சரி தான் :-) I believe, a simple win should take CSK to semifinals, no need to worry about other matches considering the NRRs of different teams. KXIP-க்கும் கடைசி ஆட்டம் இது என்பதால், இது வரை சொதப்பி வந்த யுவராஜ், நம்மைப் பின்னி பெடலெடுத்து விடுவாரோ என்று ஒரு பயம் வருகிறது! Yuvaraj & KXIP would do their best to go down / leave this year's tournament with Glory!

5. 14 புள்ளிகளில் இருக்கும் தில்லி, ஹைதரபாத் மற்றும் பெங்களூர் அணிகள், (12 புள்ளிகளில் இருக்கும், NRR ஆரோக்கியமாக இருக்கும்!) சென்னை அணி தோற்பதையே அதிகம் விரும்புவார்கள்! ஆக, சென்னைக்கு எதிரிகள் அதிகமாகி விட்டார்கள்! பஞ்சாப் மட்டுமே நம் எதிரி அல்ல ;-)

6. DD-DC ஆட்டம் ஒரு முக்கியமான ஆட்டம். வெல்லும் அணிக்கு, கண்ணை மூடிக் கொண்டு செமிஃபைனல் தகுதி கிட்டி விடும். சென்னையும், ராஜஸ்தானும் தங்கள் கடைசி ஆட்டங்களில் தோற்கும் சூழலில், தில்லி, ஹைதராபாத், இரு அணிகளுமே செமிக்கு தகுதி பெறவும் வாய்ப்பு இருக்கிறது!

7. கடைசி ஆட்டமான MI vs KKR, அணிகளின் தற்போதைய NRR-ஐ வைத்துப் பார்க்கும்போது, செமிஃபைனல் தகுதி நிலைமையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று இப்போதே கூறுவேன்! ஆக, மும்பை, RCB தவிர, மற்ற இரண்டு செமிஃபைனல் இடங்களுக்குத் தகுதி பெற தில்லி, DC, CSK என்று 3 அணிகளுக்கு மட்டுமே பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானுக்கு, மேலே சொன்னபடி, 20% வாய்ப்பு...

எ.அ.பாலா

Saturday, April 10, 2010

562. ஒரு நெஞ்சார்ந்த நன்றி (கௌசல்யா), ஒரு அவசர உதவிக்கு வேண்டுகோள்(முத்துராமன்)

அன்பான தமிழ் வலையுலக/வாசக நண்பர்களே,

கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு வலைப்பதிவர்களும், என் வலைப்பதிவு வாசகர்களும் மனமுவந்து செய்த பொருளுதவியால், இன்று கௌசல்யா தனது மருத்துவப் படிப்பை (ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில்) முடித்து விட்டார். ஓராண்டு House Surgeoncy. பிறகு Post graduate படிப்புக்கான தேர்வுக்கு வேண்டி பயின்று வருகிறார். உங்களுக்கு என் இதயபூர்வமான நன்றியை தலை வணங்கித் தெரிவித்துக் கொள்கிறேன். சமூக உதவி முயற்சிகளுக்கு நீங்கள் அளித்து வரும் பேராதரவு தான், எனக்கும் சகபதிவர்/நண்பர் ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது

கௌசல்யா குறித்த எனது பதிவுகளை இங்கே காணலாம்

நண்பர்களுடன் சமூகசேவை -சமயம் கிடைக்கும்போது இவ்விணைபபில் உள்ள இடுகைகளை வாசிக்கவும்.

அடுத்து, ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

முத்துராமன் – அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள கடிதம் இங்கே

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.

எனக்குக் கிடைத்த தகவலின்படி, இதுவரை சேகரித்த தொகையின் ஒரு பகுதி, அறுவை சிகிச்சை தள்ளிப் போன காரணத்தால், பரிசோதனைகளுக்கும், டயாலிஸிஸுக்கும் செலவாகி விட்டது. இருந்தும், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கைவசமுள்ளது, நம்பிக்கை அளிக்கிறது. மேலும், இரண்டரை லட்சம் தேவை என்பதாலேயே இந்த வேண்டுகோள்.

எழுத்தாளர் பாராவின் மனம் நெகிழவைக்கும் இவ்விடுகையையும் வாசிக்கவும்.

முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
அன்புடன் பாலா - balaji_ammu@yahoo.com

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBIN0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்குப் பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நேரடியாக நீங்கள் முத்துராமனின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்புகையில், அது குறித்து விவரங்களை எனக்கு/ராம்கிக்கு மடல் வழி தெரிவித்தால், பணம் வந்து சேர்ந்த தகவலை உங்களுக்கு கன்ஃபர்ம் செய்யவும், சேகரிக்கப்பட்ட தொகையின் கணக்கை சரி பார்க்கவும், தெரிவிக்கவும் உதவியாக இருக்கும்.

தேவையெனில், (மடல்வழி தொடர்பு கொள்ளும் நண்பர்களுக்கு) எனது/ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்களை/முகவரியைத் தருகிறேன். இதற்கு முன் உதவி முயற்சிகளுக்கு பணம் அனுப்பிய நண்பர்களிடம் என்/ராம்கியின் வங்கிக் கணக்கு விவரங்கள் இருக்கும். மீண்டும் சிரம் தாழ்த்தி உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.

அன்புடன்
பாலா

Tuesday, April 06, 2010

561. வீறு கொண்டு எழுந்து த்ரிவிக்ரமனாக விண்ணளந்த முரளி விஜய் -IPL

1. CSK vs RCB at Chennai

தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த சென்னை, பலமான RCB அணியுடன் சேப்பாக்கத்தில் மோதியபோது, எனக்கு நம்பிக்கை இல்லை. அதுவும், 10 ஓவர்களில் 80-2 என்று RCB இருந்த நிலையில், 180 உறுதி என்று தான் தோன்றியது. துஷாரா, ஜகதி, முரளி என்று மூவரும் திறமையாக பந்து வீசியதில், RCB எடுத்தது 161 ரன்கள் மட்டுமே!

161-ஐத் சென்னை அணி துரத்தியபோது, விஜய்யின் வீறுகொண்ட ஆட்டத்தால் (ஒரு ஓவரில் பிரவீனை 26 ரன்களுக்கு விளாசினார்!), மேட்ச் நமக்கு டென்ஷன் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது. விஜய் அவுட்டானபோது ஸ்கோர் 104-2 (10.5). அதில், அவர் எடுத்தது 78 ரன்கள் (39 பந்துகள், அதாவது 200% SR). தேவையான ரன்ரேட், 6.4 மட்டுமே! தோனியும், மார்க்கலும் பயங்கரமாகத் தடவி அவுட்டும் ஆனதில், ஸ்கோர் 143-4 (17.3), ரன்ரேட் 7.6, ரெய்னா இருந்தபோதும், ரென்ஷன்! (என் மனதில் பஞ்சாபுக்கு எதிரான, நாம் சூப்பர் ஓவரில் தோற்ற மேட்ச் நிழலாடியது) :-)

பத்ரி & ரெய்னா, 2 ஓவர்கள், 16 ரன்கள் தேவை. 4 பந்துகளில் 6 ரன் எடுத்து, 5வது பந்தில், பத்ரி அனாவசிய அவுட்! இப்போது, 7 பந்துகள், 10 ரன் தேவை! "பஞ்சாபிய" துர்சொப்பனம் பயமுறுத்தியவண்ணம் இருந்தது! வினய்குமார் என்ற மிக நல்லவர் நோ பால் வீச, ரெய்னா ஸ்டம்பை விட்டு நகர்ந்து, கவர் மேல் பந்தை தூக்கியடித்தார், Shot of the day, சிக்ஸர்! சென்னை ரசிகர்களின் பிரஷர் சர்ரென்று குறைந்தது :)

7 பந்துகளில், 3 ரன்கள் தேவை. மீண்டும் நோ பால், 2+1 ரன்கள், சென்னைக்கு மிகத் தேவையாய் இருந்த ஒரு வெற்றி கிட்டியது, அதுவும் ஒரு பலமான அணியுடன்! ஏதோ ரன் கணக்கு குளறுபடியில், இன்னொடு பந்து வீசப்பட்டு, ரெய்னா இன்னொரு பவுண்டரி அடித்து வெற்றியை இன்னொரு முறை கன்பர்ம் செய்தார், சுபம் :-)

2. CSK vs RR at Chennai
சென்ற மேட்சில் வீறுகொண்டு எழுந்த விஜய், இந்த மேட்சில், த்ரிவிக்ரமவதார வாமனன் விஸ்வரூபமெடுத்து விண்ணளந்தது போல, ஒரு ஆட்டம் ஆடியது கண் கொள்ளாமல் இருந்தது என்றால் அது மிகையில்லை!

இது போன்ற அதிரடியை இதுவரை சேப்பாக்கம் பார்த்ததில்லை என்று நிச்சயமாகக் கூறலாம்! விஜய் ஆடிய காஸ்மிக் நடனத்தால் (127 ரன்கள், 56-ஏ பந்துகளில், SR 227%)சென்னை, IPL-ன் அதிகபட்ச மொத்த ரன் எண்ணிக்கையை (246) எட்டியது. நூறு அடித்த ஒரு பேட்ஸ்மன் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் நிறைய அடிப்பது எப்போதும் நிகழ்வதில்லை. விஜய் அடித்தது, 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் (98 ரன்கள்!!!)

ராஜஸ்தானை எளிதாக வென்று விடலாம் என்று தான் மொத்த சென்னையும் எண்ணியது. ஆனால், RR-ன் பதிலடி spectacular என்ற வகையில் அமைந்தது. பாலிங்கரைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் (முரளியும் சேர்த்து!) எல்லாரும் நையப்புடைக்கப்பட்டார்கள்!
15வது ஓவர் முடிவில், RR 175-2. வாட்சனும் (60, 24 பந்துகள்), ஓஜாவும் (65, 38 பந்துகள்) பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருந்தனர். அதனால், பிரதி ஓவர் 14.4 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்காகவே தோன்றியது!
தனது முதல் 2 ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த பாலிங்கர் பந்து வீச வந்தார்! ஒரு நோ பாலுடன் ஆரம்பித்தாலும், அடுத்த பந்தில், வாட்சனை clean bowled செய்தார். இது தான் மேட்சின் திருப்புமுனை, அதோடு அந்த ஓவரில் 8 ரன்களே கொடுத்தார். அடுத்த ஓவரை சிறப்பாக வீசிய ரெய்னா கொடுத்தது 9 ரன்கள். 3 ஓவர்களில் 55 ரன்கள் தேவை, போலிங்கருக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்த சூழலில், Match was almost sealed in favour of CSK! ரிசல்ட்: CSK 23 ரன்களில் வெற்றி

ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இரு அணியினரின் பந்து வீச்சாளர்களும் துவைத்துத் தொங்கவிடப்பட்ட ஒரு சூழலில், பாலிங்கர் தனது 4 ஓவர்களில் கொடுத்தது, 15-ஏ ரன்கள் (2 விக்கெட்டுகள்) !!!!! பிரதி ஓவருக்கு 4 ரன்கள் கூட இல்லை.
அது மட்டுமலலாமல், ஒரு பிரமாதமான கேட்ச் பிடித்து "கிங்கரன்" பதானை வெளியேற்றி, சென்னைக்கு பெரிய அளவில் டேமேஜ் எதுவும் ஏற்படாமல் காப்பாற்றிய பெருமையும் போலிங்கருக்கே! விஜய்யின் 127க்கு சற்றும் குறைவில்லாதது, போலிங்கரின் பங்களிப்பு. மற்ற சென்னை பந்துவீச்சாளர்கள் பிரதி ஓவருக்கு வாரி வழங்கியது கீழே:

Bowling O M R W Econ
JA Morkel 4 0 56 2 14.00
S Tyagi 4 0 45 0 11.25
M Muralitharan 4 0 52 1 13.00
SB Jakati 3 0 37 0 12.33
SK Raina 1 0 8 0 8.00

ஒரே ஒரு வருத்தம் தான்! பாலாஜி அணியில் இருந்திருந்தால், அவரும் ஒரு அரை சதமாவது அடித்திருப்பார் ;-)

எ.அ.பாலா

Monday, April 05, 2010

நீர் மேலாண்மை -2 -கி அ அ அனானி

நீர் மேலாண்மை குறித்து முதல் பகுதியை வாசித்து விட்டுத் தொடரவும்.

பண்டைத் தமிழர்களின் நீர் மேலாண்மை

1) நீரின்றி அமையாது உலகு 2) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே வாழ்வாதாரமான தண்ணீரின் தேவையையும் முக்கியத்துவத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவு.

தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக பல்லவர் ஆண்ட தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. வற்றாத ஜீவநதிகள் இப்பகுதியில் ஏன் பெருவாரியான தமிழர் வாழ்ந்த பகுதியிலேயே இல்லை என்றே சொல்லலாம். எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது.

காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இந்தப் பட்டினப்பாடல் வரி ஒரு சான்று!

கிட்டத்தட்ட 1600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்
ஏகும் சுவர்க்கத்(து) தினிது

(குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரக்கிளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல்,தரிசு நிலத்தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவன் சொர்கத்துக்கு இனிதாகப் போவான்)

அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது கி பி 2ஆம் நூற்றாண்டிலேயே நல்லாதனார் "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் பின்வருமாறு கூருகிறார்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்
கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய்தி னார்.

( உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் ஆகிய இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள்)

எத்தனையோ சாம்ராஜ்ஜியங்கள் எழுந்தும் வீழ்ந்தும் போனாலும் ,எத்தனையோ மன்னர்கள் வந்து போனாலும் 1800 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டுவித்த கரிகால் சோழன் பெயர் இன்றளவும் நிலைத்திருப்பது நல்லாதனார் கணித்தது எவ்வளவு உண்மை என நமக்குணர்த்துகிறது.

இதே அடிப்படையில் பல்லவ மன்னர்கள் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் பல 'பிரமதேயம் " என்னும் குடியிருப்புகளை ஏற்படுத்தியதல்லாது அந்தக் குடியிருப்புகளுக்கு வேண்டிய நீர் ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். ( பிரமதேயமோ அல்லது அது எதற்காய் உருவாக்கப் பட்டது என்பதோ இக்கட்டுரையின் பேசு பொருளல்ல.ஒவ்வொரு குடியிருப்பு ஏற்படுத்தும் போதும் அதற்குத் தேவையான நீராதாரங்களையும் சேர்த்தே அக்கால மன்னர்கள் எழுப்புவித்தார்கள் என்பதே குறிப்பிடுகிறேன்) எடுத்துக் காட்டாக முதலாம் பரமேசுவர மன்னனின் ஆட்சிக் காலத்தில் ( கி பி 669-700) பரமேசுவர மங்கலம் என்ற பெயரில் பிரமதேயமாக நிலம் கொடுத்தான்.அத்துடன் அவ்வூரில் பரமேசுவர தடாகம் என்று ஒரு ஏரியை ஏற்ப்படுத்திப் பாலாற்றிலிருந்து நீர் கொண்டுவர பெரும்பிடுகு என்னும் கால்வாயையும், அக்கால்வாயிலிருந்து நலைவாய், தலைப் பேழை, ஊற்றுக்கால் என்னும் கிளைகளையும் வெட்டிக் கொள்ள அனுமதியளித்தான் என்பதனை கூரம் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகிறது.

இதே போல இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் உதய சந்திர மண்டலம், ஏகதீர மங்கலம், நயதீர மங்கலம் போன்ற பல ஊர்களை உருவாக்க தானமாக நிலம் கொடுத்து அதற்குத் தேவையான நீராதாரங்களுக்கும் வழிவகை செய்து கொடுத்துள்ளான் என்பதை பல செப்பேடுகள் மூலம் அறிகிறோம்.

தொண்டை நாட்டில் 1000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மிகச் சிறந்த குடியிருப்பு உத்திர மேரூர். சுமார் 5 சதுர கீ மி பரப்பளவில் இந்தப் பரந்த ஊர் அமைந்திருந்தது.10 சேரிகளும் 15 பிடாகை ஊர்களும் இதனுள் அடக்கம். (இந்த ஊரில்தான் குடஓலை முறையில் நிர்வாகக் குழுக்கள் வாரியங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவுக்கே தேர்தல் அறிமுகம் செய்யப்பட்ட நற்பணி நடந்தது) இந்த ஊரின் ஜீவ நாடியாக அமைந்தது "வைரமேகத் தடாகம்" என்னும் பேரேரியாகும். கி பி 739லேயே மகாசபை என்ற ஓர் அமைப்பு செயல் பட்டதும் இச்சபையின் கீழ் பல வாரியங்கள் பகுக்கப் பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கி பி 878ல் ஏரி வாரியம் என்றோரு வாரியம் செயல்பட்டிருப்பதே நீர்ப்பாசனத்துக்கும் நீர் மேலாண்மைக்கும் அளிக்கப் பட்டு வந்துள்ள முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

அமைத்ததோடு மட்டுமின்றி வயிரமேகத் தடாகத்தை ஆண்டு தோரும் குழிகுத்திப் பராமரிப்பது ( தூர் வாருவது) முறையாகச் செய்யப்பட்டு வந்துள்ளது. இதற்கென வணிகர்களும் செல்வந்தர்களும் நன்கொடையும் அளித்துள்ளனர்.கி பி 739லேயே குழி குத்தப்பட்ட செய்தியை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. சேட்டத்தரயன் தான வேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தை உத்திர மேரூர் சபையினரிடம் கொடுத்து குழி குத்த ஏற்பாடு செய்தான், தந்தி வர்மன் (கி பி 803-ல்) 5 பட்டி நிலத்தைக் கொடையாகப் பெற்ற பெருங்குறி சபையார் அதனைக் கொண்டு ஏரியைத் தோண்டி கரையை உயர்த்தினர். கி பி 883 ல் கழுக்குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் கொடையளித்தான் . கி பி 886ல் மன்னிப்பாக்கிழான் என்ற வணிகன் 100 கழஞ்சு பொன்னும் கி பி 886 ல் அவனே மற்றும் 100 கழஞ்சு பொன்னும் கொடுத்தான் என்று பலப் பல செய்திகள் மூலம் எப்படி அந்தக் காலத்தில் தமிழர் நீராதாரங்களான ஏரி,குளம் , கிணறு முதலானவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவைகளை வெட்டுவித்தும் பராமரித்தும் வந்துள்ளனர் என அறியமுடிகிறது.

பொதுவாகவே ஆண்டு தோரும் தூர் வாரப் பட்டுள்ளதை மாமல்லபுரம் பையனூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முன்னரே சொன்னது போல் தொண்டை நாடு என்று சொல்லக்கூடிய வட தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது. கி பி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயேமக்கள் ஏரிகளை உருவாக்கியுள்ளனர்.

கி பி 550ல் சமணத் துறவி வஜ்ர நந்திக்கு பருத்திக் குன்றம் என்ற ஊரை பள்ளிச் சாந்தமாக கொடுத்த போதே ஏந்தல் ஏரி,வேள்வடுகன் ஏரி மற்றும் நீலபாடிவதி, மூலை ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்கள் அந்த ஊரில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.
கோவில் கட்டும் போதும் ஏரி தோண்டுவதும் முக்கியமான பணியாக நற்பலனைத் தரும் பணியாக மக்கள் கருதினர். காட்டுத் தும்பூரில் 563 ஆம் ஆண்டு கனக வல்லி ஏரி உருவாக்கப்பட்டது. உத்திரமேரூருக்கருகில் மல்லியங்கரணை ஏரி, வெள்ளேரி, தும்பனேரி கார்வதி ஏரி என பல ஏரிகள் ஏற்பட்டுள்ளன.இப்படிப் பலப்பல உதாரணங்கள்.

பின்வந்த சோழர்கள் 11ஆம் நூற்றாண்டில் எடுப்புவித்த சோழகங்க ஏரி( இன்றைய பொன்னேரி) வீர நாராணம் ஏரி ( இன்றைய வீராணம் ஏரி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஏரிகளிலிருந்து நீரை வெளியே எடுப்பதற்குப் பல வழிகளைப் பின்பற்றியுள்ளனர் நம் முன்னோர். கலிங்கு, மதகு , தூம்பு என சில கட்டுமானங்களின் மூலம் நீரை முறையாகப் பயன் படுத்தியுள்ளனர். இன்றைய நீர் நிர்வாகம் அல்லது நீர் மேலாண்மை என்று சொல்லக்கூடிய அறிவுத்துதை (water Management) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களிடம் இருந்துள்ளது.

நாட்டுக்கால், ஆற்றுக்கால், ஊற்றுக்கால் எனும் பெயர்களில் அக்காலத்தில் கால்வாய்கள் அமைக்கப் பட்டுள்ளன.இவற்றைப் பராமரிக்கவும் பெரிதும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் தனிச்சையாகக் கால் வெட்டுவோர் தண்டிக்கப் பட்டுள்ளனர். நீர் நிலைகளை ஏற்படுத்துவதை தம் வாழ்வின் பெரும் தர்மமாக நினைத்துள்ளனர் மக்கள் . திருவெள்ளரை ஸ்வஸ்திகக் கிணறு ( இன்று நல்ல தமிழில் "நாலு மூலைக் கேணி" என்று அழைக்கப் படுகிறது) அருகில் உள்ள கல்வெட்டு

கண்டார்காணா உலகத்தே காதல் செய்து நில்லாதே
பண்டே பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நய்யதேய்
தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகம் அறிய வைமினே

என்கிறது .அதாவது தம் ஆயுளுக்குப் பிறகும் தம் பெயர் சொல்வது நீருதவும் தர்மம் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

நீர்நிலைகளை அழித்தல் பெரும் நாசம் என்பதனையும் நம் மக்கள் உணர்ந்து அப்படிச் செய்யப் புகுந்தவர்களை எச்சரித்துள்ளனர்

"கீழ்வேளூர் சபையார் தன்மம். இதற்கு அஹிதம்
செய்தவன் காவிரி குலை குத்தின பாவங்கொள்வான் "

என்று தாராசுரத்தில் கிடைத்த கல்வெட்டு "காவிரிக் கரையைச் சிதைத்த பாவம்" என்று பாவச் செயல்களுக்கே ஒரு reference point ஆக நீர் நிலைகளை அழிப்பதைக் கொள்கிறது

கட்டுரையின் பெறுவாரியான பகுதிகள் நான் வாசித்த முனைவர் சொ.சாந்தலிங்கத்தின் " தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் " என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது

ஆனால் இன்றைய தமிழகத்திலே நடப்பதென்ன ?

கட்டுரை மிக நீண்டு விட்டதால் அடுத்த பகுதியில் பார்ப்போம் :)

கி அ அ அனானி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Sunday, April 04, 2010

559. நீர் மேலாண்மை -1 - கி அ அ அனானி

ஒரு பிரேக்குக்கு அப்றம் கி.அ.அ.அனானியிடமிருந்து மெயிலில் மேட்டர் வந்தது! ஆஹா, இப்ப நடக்கிற பார்ப்பனீயம் / சங்கம் "டமால்-டுமீல்" பத்தி தன் கருத்துகளை தான் அனுப்பியிருப்பார்னு நினைச்சு, ஆவலா மெயிலைத் திறந்தா, கி.அ.அ.அ-வும் வேஸ்ட் பார்ட்டி ஆயிட்டார்னு புரிந்தது ;-) ஏதோ (அவருக்கு துளியும் ஒவ்வாத!) அறிவுஜீவி லெவலில், நீர் மேலாண்மை (அது என்ன எழவோ :-)) பத்தி நீ.......................ளமா மேட்டர் அனுப்பியிருக்கார்!

3 இடுகைகளாத் தான் போட முடியும்னு நினைக்கிறேன். கி.அ.அ.அ-யிடமிருந்து இந்த மாதிரி சப்பை இடுகை வருவது, பரந்து விரிந்திருக்கும் அவர் வாசகர் வட்டத்துக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம் ;-) இருந்தாலும், Considering கி.அ.அ.அ's glorious past in terms of material he has sent earlier to me for publishing in my blog, I am unable to say "No" to publish this matter, இந்த மாதிரி "அறிவுஜீவி" வேஷம் அவர் போட முனைவது சரியில்லை என்றாலும் :-) விரைவிலேயே அவர் தன்னிலை உணர்ந்து, அதற்கேற்றவாறு, "அவல்" வகை மேட்டரை எழுதி அனுப்புவார் என்று (உங்களைப் போலவே) நான் எதிர்பார்க்கிறேன்!

Over to கி அ அ அனானி.
**********************************************

நீர் மேலாண்மை - Part 1 - By கி அ அ அனானி

சில நாட்களுக்கு முன் ஹிந்து ஆங்கில நாளிதழில் பான்ஜிபாய் மதூக்கியா என்கின்ற குஜராத் விவசாயி பற்றிய கட்டுரை வாசிக்க நேர்ந்தது.அப்படி என்ன செய்து விட்டார் குஜராத்தின் மிகவும் வரண்ட மாவட்டமான ஜுனாகாத்தின் காலாவாட் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்த இந்த விவசாயி. அதிகமில்லை நண்பர்களே.வரண்ட ஜுனாகாத் கிணறுகளில் நீர் தளும்பச் செய்திருக்கிறார். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் ஜுனாகாத் மாவட்டத்தில் பல விவசாயிகள் கடும் வரட்சி காரணமாக வாழ்வாதாரமான விவசாயத்தையே கை விடும் படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் இன்றோ பெருவாரியான கிணறுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது.மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பயமின்றி விவசாயிகள் தங்களது பயிர்களை வளர்க்க முடிகிறது.பான்ஜி பாய் என்கின்ற ஒரு விவசாயி கட்டிய சிறு சிறு தடுப்பணைகள் மூலம் இந்த நிலை சாத்தியமாகி இருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

இது பான்ஜிபாய் மதூக்கியா, கி.அ.அ.அ இல்லை!

இந்த விவசாயி முதலில் தனது கிராமத்தில் ஓடும் சிறு ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை ஏற்படுத்தியுள்ளார்.இந்தத் தடுப்பணை தண்ணீரின் எடையைத் தாங்குமாறு கீழே பல அரை வட்ட வடிவ வளைவுகளைக் கொண்டுள்ளது (எப்படி ரயில்வே பாலங்களில் ஓடும் ரயிலின் எடையைத் தாங்கும் படி வடிவமைக்கப் பட்டிருக்குமோ அது மாதிரி.) இந்த தடுப்பணை கட்ட சாதாரணமாக கட்டப்படும் தடுப்பணையை விட குறைந்த செலவு

ஆவது மட்டுமல்லாமல் சாதாரண அணைகளை விட திடமானதாகவும் கட்ட எளிதானதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதன் பிரத்தியேக வடிவமைப்பினால் அதிக தண்ணீர் அழுத்தத்தையும் நீரின் ஓட்டத்தையும் தடுக்கும் படியும் இருக்கிறதாம்.

இந்தத் தடுப்பணை கட்ட பான்ஜிபாய் கிராமத்தில் சும்மா கிடக்கும் கற்களை பயன்படுத்தியிருக்கிறார்,சீரான இடைவெளியுடன் கற்களை வைத்து இடை வெளியை நிரப்ப ஆற்று மணலையும், சிறு கற்களையும் சிமென்ட்டையுமே பயன் படுத்தியிருக்கிறார்.ஒரு தடுப்பணை கட்ட கூலியும் சேர்த்து மொத்த செலவே 10000 ரூபாய்க்குள்தான் என்பது வியப்பிலாழ்த்துகிறது. இந்த முதல் தடுப்பணை கட்டப்பட்ட பின் அதன் பலனைப் பாத்த கிராமத்து விவசாயிகள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் மேலும் பல தடுப்பணைகளை கட்டச் சொல்லி இவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால் மேலும் அவர் இரண்டு தடுப்பணைகளை இதே ஆற்றின் குறுக்கே கட்டியுள்ளார்.இது வரை பான்ஜிபாய் குஜராத்திலும் ராஜஸ்தானத்திலுமாக 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார் என்பது நம்மை வாய் பிளக்க வைக்கிறது.

இந்த தடுப்பணைகளைப் பற்றி சொல்லும் போது பான்ஜிபாய் "ஒரு சிறு தடுப்பணை கட்டுவதென்றால் கிட்டத்தட்ட 50000 முதல் 100000 வரை செலவாகும். ஆனால் நான் 10000 மட்டுமே செலவழித்தேன். இங்கு ஓடும் பெருவாரியான ஆறுகள் வற்றாத ஆறுகள் இல்லை என்பதால் இந்த தடுப்பணைகள் ஆற்று உபரி நீர் ஓடி விரயமாவதைத் தடுக்கிறது. மழைக்காலம் முடிந்த உடன் தண்ணீர் தட்டுப்பாடு விவசாயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆறுகளுக்கு அடுத்த படியான முக்கிய நீராதாரங்கள் கிணறுகள் தான்.

மழைக்காலம் முடிந்தால் கிணற்று நீர் மட்டமும் குறைந்து விடுகிறது. இந்தத் தடுப்பணை உபரியாக ஓடும் நீரைத் தடுப்பதுடனல்லாது கிணற்று நீர் அளவையும் உயர்த்தி விடுகிறது" என்கிறார்.

பான்ஜிபாயின் இத்தகைய தடுப்பணைகளை கட்ட அதிகம் செலவாகாது என்பதால் அரசாங்கத்தின் உதவியை எதிர் பார்க்காமல் தனி நபர்களோஅல்லது சிறு குழுக்களோ கூட எளிதாக செயல் படுத்தி விடலாம்.இந்த முறை இந்தியாவெங்கும் பயன் படுத்தப் பட்டால் கிராம சிறு விவசாயம் பெரும் நன்மையடையும் என்பதோடு மட்டுமல்லாது இந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கே உதவியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.பான்ஜிபாய் போன்ற அனுபவ இயற்கை விஞ்ஞானிகள் நமது கிராமப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பு போன்றவர்கள் என்றால் அது மிகையில்லை.

வற்றாத நதிகள் இல்லாத நமது தமிழகத்திலும் இது போன்ற சிறு சிறு முயற்ச்சிகளை செயல்படுத்தினாலே விவசாயத்தில் முன்னேற்றம் காணலாம் என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் அந்தக் காலத்தில் செயல் படுத்தப் பட்ட நீர் மேலாண்மை மற்றும் எனது கருத்துக்கள் பற்றி அடுத்த பதிவில் :)

கி அ அ அனானி

செய்தி மற்றும் படம்: நன்றி. ஹிந்து நாளிதழ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Monday, March 29, 2010

558.சென்னை அணியின் 4வது தொடர் தோல்வி -CSK vs RR

சென்னை தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால், ராஜஸ்தானுடன் ஆன போட்டியில் சூடு பறக்கும் என்று எண்ணினேன்! ஆனால், தோல்விக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் இல்லை என்று சென்னை அணி கேவலமாக விளையாடி தோற்றது!
முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்தது, முதலில் நிதானமாக ஆடிய ஓஜா, பிறகு எல்லா போலர்களையும் ஒரு வாங்கு வாங்கியதில், 11 ஓவர்களில் ஸ்கோர் 100-1. யூசுப் பதான் இன்னும் களமிறங்காத நிலையில், ராஜஸ்தான் 200 தொடுவார்கள் என்று தான் எண்ணினேன். சிறப்பாக பந்து வீசிய ஜகதியின் பந்தில், பதான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஓஜா, 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தது ஹைலைட், அது போல, நன்றாக பந்து வீசக்கூடிய மார்க்கல், 4 ஓவர்களில் 46 ரன்கள் வாரி வழங்கியது ஒரு கரும்புள்ளி. இருந்தாலும், 177 ரன்கள் என்பது தோனி, ரெய்னா, ஹெய்டன் உள்ள சென்னைக்கு கடின இலக்காகத் தோன்றவில்லை!

ஹெய்டன் சீக்கிரமே அவுட் ஆனாலும், விஜய் நன்றாகவே ஆடினார். நர்வாலின் ஒரு ஓவரில் விஜய் 26 ரன்கள் குவித்தது ஹைலைட். 75-2 (8.4) என்ற நிலையில், இல்லாத ரன்னுக்கு ஸ்டார்ட் கொடுத்து, கிரிஸூக்குத் திரும்ப முடியாமல், விஜய் அனாவசிய ரன்-அவுட்! விஜய்யைப் போலவே, மூளையை அடகு வைத்து, ரெய்னா வார்ன் பந்தில் Clean Bowled! 79-3 (9.4). தோனி இருந்ததால் நம்பிக்கை இருந்தது, ரன்ரேட் 9.7 ஆக இருந்தாலும்!

ஒரு கட்டத்தில், ரன்ரேட் 12க்கு மேலே சென்றது, இருந்தும் நம்பிக்கை இருந்தது தோனி மேல்! தமிழ்நாட்டுச்சிங்கம், domestic ஆட்டப்புலி பத்ரி, ரன் எடுக்கையில் தோனி மீது மோதி, அவர் மட்டையையும் தட்டி விட்டதில், தோனி ரன்அவுட். சென்னைக்கு ஆப்பு உறுதியானது!
மார்க்கல், வார்ன் ஓவரில் (18வது) 3 சிக்ஸர்கள் அடித்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனாலும், அடுத்த ஓவர் வீசப்போவது வேகப்பந்து வீச்சாளர் டைட் என்பதால், வெல்வது கடினம் என்று புரிந்தது! டைட் மார்க்கலை அவுட்டாக்கினார், 160-ல் சென்னை சுருண்டது! டைட் பந்து வீச்சு அபாரம்: 4-0-22-2. திரிவேதியும் தனது 4 ஓவர்களில் 16 ரன்களே கொடுத்தார்!

தோனி பத்ரிக்கு முன்னால், மார்க்கலை பேட் செய்ய அனுப்பியிருக்க வேண்டும். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் விழும்போது தான், இன்னிங்சை சீர்படுத்த பத்ரியை அனுப்புவது பயன் தரும்! அடுத்த ஆட்டத்தில் மார்க்கலை சற்று முன்னால் ஆட அனுப்பினால் நல்லது என்று தோன்றுகிறது!

"லோக்கல்" வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது தான், சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கியக் காரணம். இத்தோல்விக்கு (நன்றாக ஆடிக் கொண்டிருந்தபோது!) தன்னைத்தானே ரன்அவுட் செய்து கொண்ட விஜய்யும், தோனியை ரன்அவுட் செய்த பத்ரியும் அதிமுக்கியக் காரணங்கள்! Batsmen who get good starts should carry on to win the game! இப்படி நான் சொன்னது, டிவிட்டரில் உலவும் தமிழ்ப்பாசம் மிக்க, "வருத்தப்படாத" வாலிபர் ஒருவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தினால் நான் என்ன செய்ய ;-)

அடுத்து நடந்த MI vs DC ஆட்டத்தில், 16 பந்துகளில் 49 ரன்கள் விளாசிய ஹர்பஜனிடமிருந்து சென்னை அணியின் லோக்கல் மட்டையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது! திறமை மட்டுமே போதாது, மனஉறுதியும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு மிக அவசியமான குணங்கள்.

ஒரு பந்துவீச்சாளரோ/ மட்டையாளரோ ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணியின் வெற்றிக்கு தனிக்காரணமாக விளங்க T-20-இல் (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களைக் காட்டிலும்) சாத்தியங்கள் அதிகம்! எல்லாரும் சிறப்பாக ஆடும்போது, தானும் கலக்குவது பெரிய விஷயமில்லை என்பதை சென்னை "லோக்கல்" வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Even if one fails in couple of matches, when he rises to the occasion when the chips are down and ensures victory in the 3rd match, his failures can be ignored! But, unfortunately that is not the case with the CSK's Local players :-(

எ.அ.பாலா

Saturday, March 27, 2010

557.மற்றுமொரு தோல்வி -CSK vs MI -IPL

இந்த மேட்சை பார்க்க ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்து விட்டேன்! தோனி சச்சினுடன் டாஸுக்கு வந்தது வயிற்றில் பாலை வார்த்தது. சச்சின் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். நாம் டாஸில் ஜெயித்திருந்தாலும், பேட் செய்திருப்போம் என்பது என் அனுமானம்.

ஜாகீரை ஒரு ஓவரில், மங்கூஸ் துணையின்றி, 4 பவுண்டரிகள் அடித்த ஹெய்டன் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கவில்லை, ஹர்பஜன் பந்து வீச்சில் அவுட்! பார்த்திவ்வும் (இவரை யாரோ குட்டி ஹெய்டன் என்றதற்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை!) சீக்கிரமே ஆட்டமிழந்தார். தோனி அணிக்குத் திரும்பியதால், confidence personified ஆக ரெய்னா பயமின்றி விளையாடியது, நல்ல பலனைத் தந்தது. முதலில் நிதானமாக ஆடிய பத்ரியும், ரெய்னாவும் ரன்களை குவிக்க ஆரம்பித்தனர், மும்பை தரப்பில் மெக்லாரனும், ஹர்பஜனும் சிறப்பாக பந்து வீசியபோதும்!

இருவரும் 15 ஓவர்கள் ஜோடி சேர்ந்து ஆடியதில், ஸ்கோரை 38லிருந்து 180க்கு எடுத்துச் சென்றனர். அதாவது, 15 ஓவர்களில் 142 ரன்கள் (9.47 பிரதி ஓவருக்கு). இன்னும் ஒரு 10 ரன்கள் எடுத்திருக்கலாம் தான் என்றாலும், 180 என்பது defend செய்யத் தக்கதே என்பது என் கருத்து!

இப்படிச் சொல்லக் காரணங்கள் உள்ளன!

1. முரளியும், மார்க்கலும் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம், அஷ்வினுக்கு பதிலாக வந்த ஜகதியும் மோசமான பந்து வீச்சாளர் இல்லை! பாலாஜியும், ஜோகீந்தரும் ஓரளவு ஈடு கொடுத்தால், மும்பையை கலங்கடிக்க முடியும்!

2. மும்பை அணியில் சச்சினைத் தவிர மற்றவர் ஆவரேஜ் பேட்ஸ்மேன்கள் தான். ப்ரேவோ, போலார்ட் இருவரும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தடுமாறுபவர்கள்! தவான், திவாரி, சதீஷ் எல்லாம் நேற்றைய மழையின் காளான்கள் வகை, பிரஷரை எதிர்கொள்ளும் திறன் அற்றவர்கள்!

தோனியின் பந்துக் காப்பமைப்பும் (Field placement) பந்து வீச்சு மாற்றங்களும் நேற்று சோபிக்கவில்லை! இடையில் 3 மேட்ச்கள் ஆடாதது காரணமாக இருக்கலாம். பாலாஜி, ஜோகீந்தர் புண்ணியத்தில், தவான் செட்டில் ஆகி நம்மை ஒரு வாங்கு வாங்கினார். சச்சின் விளாசலை ஏற்றுக் கொள்ளலாம். தவானையெல்லாம் வளர்த்து விடுவது கொடுமையின் உச்சம்! இருந்தும், 92 for no loss (8.5 ஓவர்கள்) நிலையிலிருந்து மும்பை 120-3 (13.2) என்ற நிலைக்கு வந்ததற்கு முரளியும், ஜகதியும் தான் காரணம். சென்னைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது!

கடைசி 5 ஓவர்களில், 48 ரன்கள் (RR 9.6) தேவை என்ற நிலையில், Match was interestingly poised. அப்போது தான் தோனி ஒரு பெரும் தவறிழைத்தார்! தனது முதல் மேட்ச் ஆடும் பெரேராவை 16வது ஓவரை வீச அழைத்தார். ஒரு பந்தைக் கூட பிட்ச் பண்ணத் துப்பில்லாத அந்த அறிவிலி, அந்த ஓவரில் 19 ரன்கள் (4 பவுண்டரிகள்) வாரி வழங்கினார்!!! அதன் பின், போலார்டும், சச்சினும் விக்கெட்டிழந்தும் பயனொன்றுமில்லை. சென்னை அணியின் மூன்றாவது தொடர் தோல்வி இது!

KXIPக்கு எதிரான மேட்ச்சில் 2 பந்துகளில் 1 ரன் அடிக்கத் துப்பில்லாத அஷ்வின் அத்தோல்விக்கு முக்கியக் காரணமானார். மும்பைக்கு எதிரான தோல்விக்கு (மேட்ச் மும்பை பக்கம் திரும்பியதற்கு!) பெரேராவின் பந்து வீச்சே காரணம்! டிவிட்டர் நண்பர் ஒருவர் (http://twitter.com/mu75) கூறியதைச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:
It is written. How Sinhalese can win a match for Chennai? :-(

நமது பந்து வீச்சு, முரளி, மார்க்கல் தவிர்த்து, படு சுமாராய் காட்சியளிப்பதை வைத்துப் பார்க்கையில், சென்னை அணி செமிஃபைனலுக்கு தேர்வாகும் என்று தோன்றவில்லை! நமது பேட்டிங்கை வைத்து, 136 ரன்கள் இலக்கையும் அடைய முடியவில்லை, நமது பந்துவீச்சை வைத்து, 180 ரன்கள் இலக்கையும் டிஃபண்ட் பண்ண முடியவில்லை :( என்ன இழவு பிரச்சினையோ?

எ.அ.பாலா

Monday, March 22, 2010

556. நமக்கு எதிரி நாம் தான் - சேப்பாக்கம் IPL -CSK vs KXIP

(நேற்று) ஞாயிறு காலை எழுந்தவுடன் அன்று சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த (சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஆன) ஐபிஎல் டி-20 மேட்ச்சை அரங்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. எழுந்திருந்தபோதே லேசாக இருந்த மைக்ரைன் காரணமாக இருக்கலாம்!

சென்னை ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாவற்றுக்கும் டிக்கெட் விற்பனை முடிந்து விட்ட நிலையில், நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு கேட்டதில், ஆபத்பந்தவனாக, அனாதரட்சகனாக, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் 2 காம்ப்ளிமெண்ட்ரி டிக்கட் கிடைச்சுது, உனக்குத் தான் ஃபோன் பண்ணலாம்னு இருந்தா, நீயே பண்ணிட்டே!!" என்று நெஞ்சில் பாலை வார்த்தான் :-) மாத்திரையை போட்டு மைக்ரைனை விரட்டி, 3-4 வருடங்களுக்குப் பின் சேப்பாக்கம் செல்லத் தயாரானேன் (நண்பனுடன்).

அரங்கம் அமைந்துள்ள பெல்ஸ் சாலையில், அரங்கத்திலிருந்து எழுந்த பேரிரைச்சலாலும், சிவமணியின் டிரம்ஸாலும், மிதமான நிலநடுக்கத்தை உணர முடிந்தது! கொடி, தொப்பி, டி-ஷர்ட், bandana, ஊதுகுழல் விற்பவர்கள், 10 ரூபாய்க்கு மூஞ்சியில் படம் வரைந்து உங்களை CSK வெறியராக மாற்றுபவர்கள், ரசிகர் கூட்டம் என்று ஜேஜே என்றிருந்த அச்சாலையில் நடக்கையில் உற்சாகம் பற்றிக் கொண்டது. அரங்கத்தில்நுழைவதற்கு முன், செலவழித்த ஒரு 30 நிமிடங்கள் இவ்விடுகைக்கு தேவையில்லாதது ;)

வாலாஜா சாலையில் இருந்த D-Stand நுழைவு வாயிலில் புகுந்து, செக்யூரிட்டி செக் முடிந்ததும், பச்சை பசேலென அரங்க (ரங்கநாதரும் பச்சை மாமலை மேனி தான்!) தரிசனம்! ஃப்ளட் லைட் ஒளி வெள்ளம் இரவை பகலென ஏமாற்றிக் காட்டியது. அரங்குக்கு வெளியே திருமங்கையாழ்வார் பாடிய திருவல்லிக்கேணி, உள்ளே அமெரிக்கா! உட்சூழல், தோற்றத்தைச் சொல்கிறேன். ஹைடெக் காபி மெஷின், குளிர்பானங்கள், அக்வாஃபினா, சியர் லீடர்ஸ், அதிரும் ராக் இசை என்று அமெரிக்கத்தனம் தெரிந்தாலும், கழிவறைப்பக்கம் சென்றவுடன் சந்தேகம் தீர்ந்து விட்டது!

(KXIP) சியர் லீடர்சுக்கு அருகில், நேர் எதிராக இருக்கையை தேர்ந்தெடுத்தேன். ஐபிஎல்-லை பொருத்தவரை கிரிக்கெட் மட்டுமே நோக்கமாக இருப்பது தகாத ஒன்று! இதை மகான் லலித் மோடியே திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்!

டாஸ் வென்ற சென்னை அணி, பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது! பஞ்சாப் ஆட்டத்தில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை. மற்ற வீரர்கள் சொதப்பியதில், விக்கெட் ரெகுலராக விழுந்ததில், யுவராஜ் கூட ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் தத்தளித்தார், 2 அட்டகாசமான சிக்ஸர்களை அடித்தாலும்! பஞ்சாபின் சொதப்பல் தந்த கடுப்பை பெருமளவு குறைத்த பெருமை சிவப்பு உடையில் ஜொலித்த பஞ்சாப் சியர் லீடர்ஸையே சாரும்! சியர் லீடர்ஸ் ஆட்டம், பஞ்சாப் அணியின் ஆட்டத்தை விட எவ்வளவோ மேல்! தமிழ் குத்துப் பாட்டுகளுக்கு (அப்டி போடு போடு, நாக்கமுக்க, ஓடிப்போயி, வேர் இஸ் தி பார்ட்டி..) அவர்கள் improvise பண்ணி ஆடியது சூப்பர் :-) (ஆடிய மூன்றில், 2 பிளாண்ட், 1 புருனட் என்பது வாசகர்களுக்கு கூடுதல் தகவல்!)

சியர் லீடர்ஸே இப்படி imrpovise பண்ணி கலக்கியபோது, பஞ்சாப் சிங்கங்கள் ஒன்று கூட improvise பண்ணி அதிரடியாக ஆடாததற்குக் காரணம், தோனியில்லாத சென்னை சோனிகளுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று அவர்கள் நினைப்பாக இருக்கலாம் :-)

யுவராஜ் 43 (28 பந்துகள்); பஞ்சாப் 136 ரன்களில் சுருண்டது! முரளி தன் உலகத்தரத்தை நிரூபிக்கும் வகையில் அபாரமாக பந்து வீசியது தான் ஹைலைட் (4-0-16-3) ஆஹா, சென்னை மிக எளிதாக வென்று விடும் என்று தான் எண்ணினேன், பார்த்திவ் படேலும், ஹெய்டனும் 6.5 ஓவர்களில் 50 தொட்டபோது! சென்னை அணி 12.3 ஓவர்களில் 96-2 (ரெய்னா அவுட்). தேவையான ரன் ரேட், 5.47 மட்டுமே! (8 விக்கெட்கள் வைத்துக் கொண்டு டெஸ்ட் மேட்ச்சில் கூட இவ்விலக்கு சுலபமானது).

சென்னைக் கோமாளிகள் முரளி விஜயும், பத்ரிநாத்தும் மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடியதில், ஸ்கோர் 104-4, பா.படேலும், கோனியும் தொடர்ந்து வெளியேறியபோது, ஆட்டம் TIE ஆகப் போகிறது என்று விளையாட்டாய் நண்பனிடம் சொன்னேன், அவன் என்னை விட டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக (நாம் வெல்ல) ஒரு வாய்ப்பு (2 பந்துகள் ஒரே ஒரு ரன்!) இருந்தபோது, மற்றொரு சென்னைக் கோமாளி அஷ்வின், ஒரு பந்தில் ரன் எடுக்க முடியாமல், அடுத்த பந்தில் அவுட்டானார். பஞ்சாப் தரப்பில் ரமேஷ் போவாரும், தென்னாப்பிரிக்க வீரர் யுவான் தெரானும் சிறப்பாக பந்து வீசினர்!

அடுத்து நடந்த சூப்பர் ஓவர் அவலத்தைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவுமில்லை! சென்னை அணி மண்ணைக் கவ்வியது :-( இப்படியாக சில ஆண்டுகளுக்குப் பிறகான என் சேப்பாக்கம் விஜயம் சோகத்தில் முடிந்தது!

இறுதியாக, டிவிட்டரில் கிரிக்கெட் விமர்சக "ஐயா" ஒருவர், 50 ரன்கள் அடித்து, 121 வரை ஸ்கோரை இட்டு வந்த பா.பட்டேல் தான் சென்னைத் தோல்விக்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டார்! சே, இவரை மாதிரியெல்லாம் வித்தியாசமாக, புத்திசாலித்தனமாக நம்மால் யோசிக்க முடியலையே என்று ஒரே ஆதங்கமாகப் போய் விட்டது ;-)

எ.அ.பாலா

Thursday, March 04, 2010

555. கல்கியில் நண்பர் பாசிடிவ் அந்தோணியின் கட்டுரை

எனது அந்தோணிக்கு உதவி வேண்டி என்ற இடுகையின் வாயிலாக அந்தோணியுடனான நட்பு தொடங்கியது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற திடமான எண்ணமும் மிக்கவர் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மனச் சோர்வான சில சமயங்களில், அவருடன் பேசி மனத்தெளிவடைந்திருக்கிறேன். அந்தோணி தொடர்பான என் இடுகைகள் கீழே:

http://balaji_ammu.blogspot.com/2008/08/452.html

http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html

சமீபத்திய கல்கி சுயமுன்னேற்றச் சிறப்பிதழில் (07.03.2010) அந்தோணியின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.

இலக்குகள் பற்றி அந்தோணியைக் கேட்டால்,
"தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் இவற்றில் அடிப்படையிலான துறையில் சுயபரிசோதனைகளை சகமானுடத்துடன் பகிர வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்" என்கிறார்.
என்ன ஒரு உயர்வான சிந்தனை! வாழ்க!



அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails